44 – அத்துகான்
அத்தியாயம் : 44 அத்துகான் – அந்தப் புகை, மொத்த வசனங்கள் : 59
பத்தாவது வசனத்தில் புகை மூட்டம் பற்றிய ஓர் எச்சரிக்கை இடம் பெற்றுள்ளதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. ஹா, மீம்.
2. தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
3. இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம்.
4. அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.
5, 6. (இது) நமது கட்டளை. உமது இறைவனின் அருளாக நாம் தூதர்களை அனுப்புவோராக இருந்தோம். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.
7. அவன் வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே உள்ளவற்றின் இறைவன். உறுதியாக நம்புவோராக நீங்கள் இருந்தால் (இதை அறிந்து கொள்ளுங்கள்!)
8. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான். (அவன்) உங்கள் இறைவனும், முந்தைய உங்கள் முன்னோர்களின் இறைவனுமாவான்.
9. எனினும் அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
10. வானம் தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை எதிர்பார்ப்பீராக!
11. அது மக்களை மூடிக் கொள்ளும். இதுவே துன்புறுத்தும் வேதனை.
12. “எங்கள் இறைவா! எங்களை விட்டும் வேதனையை நீக்குவாயாக! நாங்கள் நம்பிக்கை கொள்பவர்கள்” (என்று கூறுவார்கள்)
13. அறிவுரை அவர்களுக்கு எவ்வாறு (பயனளிக்கும்?) அவர்களிடம் தெளிவான தூதர் வந்துள்ளார்.
14. பின்னர் அவரை அவர்கள் அலட்சியம் செய்தனர். “பிறரால் கற்றுக் கொடுக்கப்பட்டவர்; பைத்தியக்காரர்” என்றும் கூறினர்.
15. வேதனையைச் சிறிது (நேரம்) நாம் நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்கு) திரும்புவீர்கள்.
16. மிகக் கடுமையான பிடியாக நாம் பிடிக்கும் நாளில் தண்டிப்போம்.
17. அவர்களுக்கு முன் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைச் சோதித்துள்ளோம். அவர்களிடம் மரியாதைக்குரிய தூதர் வந்தார்.
18. அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படையுங்கள்! நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர்.
19. அல்லாஹ்வுக்கு எதிராக ஆணவம் கொள்ளாதீர்கள்! நான் உங்களிடம் தெளிவான சான்றைக் கொண்டு வருபவன்.
20. என்னை நீங்கள் கல் எறிந்து கொல்வதை விட்டும் உங்களுக்கும் இறைவனாகிய என் இறைவனிடம் காவல் தேடுகிறேன்.
21. “என்னை நீங்கள் நம்பாவிட்டால் என்னை விட்டு விலகி விடுங்கள்!” (என்றார்.)
22. “‘அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவே உள்ளனர்” என்று தமது இறைவனிடம் அவர் பிரார்த்தித்தார்.
23, 24. “எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் எதிரிகளால் பின் தொடரப்படுவீர்கள். பிளக்கப்பட்ட நிலையில் கடலை விட்டு விடுவீராக! அவர்கள் மூழ்கடிக்கப்படும் படையினராவர் (என்று இறைவன் கூறினான்.)”
25, 26, 27. அவர்கள் எத்தனையோ சோலைகளையும், ஊற்றுகளையும், பயிர்களையும், மதிப்புமிக்க இடங்களையும், அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த சொகுசுகளையும் விட்டுச் சென்றனர்.
28. இப்படித்தான்! வேறு சமுதாயத்தினரை அதற்கு உரிமையாளர்களாக ஆக்கினோம்.
29. அவர்களுக்காக வானமும், பூமியும் அழவில்லை. அவர்கள் அவகாசம் கொடுக்கப்படவும் இல்லை.
30, 31. இஸ்ராயீலின் மக்களை இழிவு தரும் வேதனையிலிருந்து, ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினோம். அவன் ஆணவம் கொண்டு வரம்பு மீறியவனாக இருந்தான்.
32. அகிலத்தாரை விட அவர்களை அறிந்தே தேர்வு செய்தோம்.
33. எதில் தெளிவான சோதனை உள்ளதோ அத்தகைய சான்றுகளை அவர்களுக்கு வழங்கினோம்.
34, 35, 36. “முதல் தடவை மரணிப்பது தவிர வேறு இல்லை. நாங்கள் எழுப்பப்படுவோராக இல்லை; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோர்களைக் கொண்டு வாருங்கள்!” என்று அவர்கள் கேட்கின்றனர்.
37. இவர்கள் சிறந்தவர்களா? அல்லது “துப்பஃ’ என்ற சமுதாயத்தினரா? இவர்களுக்கு முன் சென்றவர்களை நாம் அழித்து விட்டோம். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாகவே இருந்தனர்.
38. வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
39. தக்க காரணத்துடன் தவிர அவ்விரண்டையும் நாம் படைக்கவில்லை. எனினும் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
40. தீர்ப்பு நாள் தான் அவர்கள் அனைவருக்கும் (எச்சரிக்கப்பட்ட) நேரம்.
41, 42. அந்நாளில் எந்த நண்பனும் எந்த நண்பனுக்கும் எந்த ஒன்றையும் பயனளிக்க மாட்டான். அல்லாஹ் அருள் புரிந்தவரைத் தவிர அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். அவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
43, 44. ஸக்கூம் எனும் மரம் குற்றவாளியின் உணவாகும்.
45, 46. உருக்கிய செம்பைப் போலும், கொதிக்க வைக்கப்பட்ட நீர் கொதிப்பதைப் போலும் வயிறுகளில் அது கொதிக்கும்.
47. “அவனைப் பிடியுங்கள்! அவனை நரகத்தின் மையத்திற்கு கொண்டு வாருங்கள்!” (என வானவர்களிடம் கூறப்படும்.)
48. பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்!
49, 50. சுவைத்துப்பார்! நீ மிகைத்தவன்; மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்றும் கூறப்படும்.)
51, 52. (இறைவனை) அஞ்சியோர் பாதுகாப்பான இடத்திலும், சொர்க்கச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் இருப்பார்கள்.
53. ஸுன்துஸ், இஸ்தப்ரக் எனும் இரு வகையான பட்டாடை அணிந்து ஒருவரையொருவர் சந்திப்பார்கள்.
54. இப்படித் தான்! அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம்.
55. அச்சமின்றி ஒவ்வொரு கனியையும் அவர்கள் அங்கே கேட்பார்கள்.
56. முதலில் அடைந்த மரணத்தைத் தவிர அங்கே மரணத்தைச் சுவைக்க மாட்டார்கள். நரக வேதனையிலிருந்து அவர்களை அவன் காப்பான்.
57. (இது) உமது இறைவனின் அருட்கொடை. இதுவே மகத்தான வெற்றி.
58. (முஹம்மதே!) அவர்கள் படிப்பினை பெறவே இதை உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம்.
59. நீர் எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்ப்பவர்கள்.